ஒரு கனவை வாழ்தலைப் போல்
அவ்வளவு எளிதல்ல
ஒரு பொய்யை வாழப் பழகுவது.
முதலில் அது பொய்யே இல்லையென
யாருமில்லாத போது
உரக்கச் சொல்ல வேண்டும்.
பின் – அது உங்கள் வாழ்வில் நுழைவதற்கு முன்
நிகழ்த்தப்பட்ட தினசரி வழமைகளில்
ஒன்று கூட தவறாது
பார்த்துக் கொள்ள வேண்டும்.
பாகன் தன்னை கட்டிப் போட்டிருக்கும்
சம்பிரதாயமான சன்னக் கயிற்றை
அவிழ்க்கவே முடியாதென
எண்ணும் யானையைப் போல்
அந்த பொய்யைத் தாண்டிய
வாழ்வே இல்லையென
உங்கள் ஆழ்மனதை
நம்பச் செய்ய வேண்டும்.
சற்று ஸ்திரமடைந்த பிறகு
பொய்யை அழைத்து – அதன்
விரிந்த காதுகளில்
‘இனி உன் பெயர் உண்மை’
என மூன்று முறை ஓத வேண்டும்.
ஆயிற்றா…?!
ஆனால் – இந்த முறையான திட்டமிடலில் ஒரேயொரு பிசகு உள்ளது.
இன்னொருவருடைய பொய்யை
நீங்கள் வாழ
இது கொஞ்சம் கூட உதவாது.
No comments:
Post a Comment