உன் உலகைப் புரட்டிப் போடும்
பேரதிர்ச்சியான செய்தி ஒன்றை
நீ அறிந்து கொள்கையில்
உன் புழக்கடையில்
ஆர்ப்பரிக்கும் அலைகளுடன்
கரை மோதிக் கொண்டிருந்த
கடலொன்று திடீரென பல காத தூரம்
உள்வாங்கிக் கொள்கிறது.
அவ்வளவு ஆழமாக நீளமாக அகலமாக
அகோரமாக வாய் பிளந்து கிடக்கும்
புதை பள்ளத்தின் முன் – முழுவதுமாய்
ஸ்தம்பித்து மூச்சடைத்து நிற்கிறாய்.
மேனியெங்கும் ஏறத் துவங்கும்
நூற்றுக்கணக்கான விஷ எறும்புகள்
உன் விழிகளை அடைந்து
பார்வையை மறைக்கும் முன்
மூர்ச்சித்து விழுகிறாய்.
…………………………………………..
…………………………………………..
………………………………………….
கண்கள் திற..
எழுந்து கொள்.
கானகத்தின் வலுமிக்க எதிரியுடன்
போருக்குத் தயாராகும் முள்ளம்பன்றியென
உடலைச் சிலிர்த்துக் கொள்.
முன்னே தெரியும் மாபெரும் பள்ளம்
இதயத்தினுள் இடம் மாறி விட்டது
என்றா நினைக்கிறாய்….?!
பரவாயில்லை..
கடலை குடிக்கத் துவங்கு.
நிதானமாக – கடைசித் துளியும் மிச்சமின்றி.
கலைந்து கிடக்கும் கேசத்தை
சரி செய்து கொள்.
இருள் அடர்ந்து இறங்கத் துவங்குகிறதா..?
ஒன்றும் பழுதில்லை.
காணாமல் போன கடலுக்கும்
நிற்கின்றன பார்…
நெடுவழியெங்கும்
எத்துணை கலங்கரை விளக்கங்கள்..!!
No comments:
Post a Comment