பத்திரப்படுத்தியிருந்த ஒரு நெளிமுடி கொண்டு
உன் சயனக்கட்டிலில் கட்டிப் போட்டு வளர்க்கிறாய்
காட்டில் கண்டெடுத்த பூனைக் குட்டிகளை
நகரெங்கும் செல்லப் பிராணிகள் வைத்திருப்போரால்
பொறாமையோடு பேசப்படுகிறது - முன்மாதிரியான
சாதுப்பூனைகளை உருவாக்கும் உன் திட்டம்
பூனைகளின் பொதுஅறிவிற்காய் மட்டும் ஆகட்டுமென
வாளிப்பான மீன்களின் ஓவியங்கள் வரைகிறாய்
புலாலின் கள்ளவாசமறிந்திரா உன் வீட்டு சுவர்களில்
உதிரக்கறை தோய்ந்த அடர் சொப்பனங்களில்
அவை திடுக்கிட்டு எழுந்து விழிக்கையில்
அதீத கற்பனைகள் என சமாதானப் படுத்துகிறாய்
அரும்பு மீசைகளுக்கு ஒருபோதும் ஐயமேற்படாதெனும்
திடமான நம்பிக்கையில் விளையாட கொடுக்கிறாய்
பல நிறங்கள் மாற்றிப் பூசிய இறகுப் பந்துகளை
விரிப்புகளில் ரோமங்கள் ஒவ்வாமை ஏற்படுத்துமென
உன் படுக்கையிலேற நீ அனுமதிப்பதேயில்லை
கட்டுண்ட எல்லைகளில் மட்டும் சுற்றிடும் பூனைகளை
உன் பரம்பரை மரக்கட்டிலின் கால்கள் இன்று
மெல்ல ஆட்டம் காணத் துவங்குகின்றன
நீர்த்த பால் கிண்ணங்களில் மிதக்கும் தம்
வேட்டை முக பிம்பங்களில் கலங்கும்
உன் சைவப் பூனைகளின் நினைவிலூறும்
மறந்திருந்த பசியின் புதிய உறுமல்களில் .
No comments:
Post a Comment