எவ்வளவு காலியாக இருக்கின்றன
உன் தேநீர்க் கோப்பைகள்!
ஒளி ஊடுருவும் பச்சையில் – அவ்வளவு
வெறுமையால் நிறைந்திருக்கின்றன
உன் வடிவான மதுக்குப்பிகள்.
பற்கள் கடித்து நீ கடக்க முயலும்
உன் தேம்புதலின் அழுத்தம்
ஒரு கருத்த தேமலென
என் மேல் அடர்ந்து படர்கிறது.
சுவற்றின் மீது தவித்து அலையும்
சுடரின் நிழலை
எவ்வளவு நேரம் தான் பார்த்துக் கொண்டிருப்பது?
ஆளில்லா வீட்டின் மாடிப்படி வளைவில்
சின்னஞ்சிறு கால்களால்
அணைத்துக் கொண்டு உறங்கும்
இன்று பிறந்த நாய்க்குட்டிகளைப் போல
நாம் இந்த இரவில் இருக்கலாம் தானே?!
No comments:
Post a Comment