Monday, May 4, 2026

மாதொரு பாகனை?

 பார் மெச்சும் மீனாட்சியின் மூக்குத்தி மீதல்ல

கொலுசுகள் மீதே வாஞ்சை அதிகம் உனக்கு

பரல்கள் சிதறிவிடக் கூடுமென எங்கேயும்

அசைய அனுமதிப்பதில்லை நீ அவளை

உன் ஊருக்கும் சிலம்புகளுக்கும்

ஏற்கனவே ஏழாம் பொருத்தம்

கொலுசுகள் பேச்சற்றுப் போனது

நாவு துண்டிக்கப்பட்டது போலென

பொற்றாமரைக் குளத்திடம் தேம்புகிறாள் அவள்

ஊர் எல்லைக் காவலில் சற்று நீ கண்ணயருகையில்

வெற்றுக் கால்களுடன் வறண்ட நதிப்படுகை

தாண்டி தளர்ந்து செல்கிறாள் மீனாட்சி

என்ன சொல்லி சமாதானப்படுத்துவாய்

செய்வதறியாது திகைத்து நிற்கும்

மாதொரு பாகனை..

No comments:

Post a Comment