எல்லைகளற்ற வானத்தை நாம் அடைய
நீ தீட்டும் வரைபடங்கள் புதுமையானவை
உடனிருக்கையில் மிகுந்த வாஞ்சையுடன் நீ
கண்டறியும் காற்றின் சுழற்பாதைகளில்
என் கவனம் சிறிதும் நிலைப்பதில்லை
போகும் நீல பயண வழிகளெங்கும்
திசைகள் தொலையும் ஆகாயத்தின் முடிவில்
இளைப்பாறுவதைப் பற்றியே பேசுகிறாய்
இருப்பினும் என்னை
பூமியின் ரேகைகள் தெரியாத உயரங்களுக்கு
நம்பிக்கைகளூட்டி அழைத்துச் செல்லாதே
சிறகுகளின் வலி உடலில் ஏறினாலும்
தரையிறங்கும் யுக்திகளறியா பறவை நான்
ஏனெனில் ஒவ்வொரு நாளின் முடிவிலும்
என்னைத் தனித்து விட்டு நீங்கிச் செல்ல
உன்னைக் காத்திரமாக அழைத்தபடி இருக்கிறது
நீ திரும்பியே ஆக வேண்டிய நிர்பந்தங்களுடன்
சூளைகளில் சுட்ட கற்களினாலான ஒரு வீடு
நீ அழைப்பு மணியை அழுத்தும் முன்
நம் அன்பின் இறகுகளை உதிர்த்து செல்ல
காய்ந்த பூக்கள் சிதறியிருக்கும் ஒரு வாசலும்
No comments:
Post a Comment