வேதனையின் இரகசியம்
நிரம்பிய கனவுகளை
கோவைப் பழங்களென மாற்றி
உணவென இடுகிறேன்
சிறகுகள் உடைந்த
அலகு வெளுத்த
மரப்பொந்து பறவைக்கு
மண்ணில் வீழும் எச்சவிதைகள்
வெடித்து முளைக்கும்
வலியின் ஒலியோடு
காற்றில் நீண்டலையும்
பயத்தின் கொடிகள் இறுக
சுற்றிப் படர்கின்றன விருட்சத்தை
இடைவெளியின்றி
பொந்துக்குள் சிக்கித் திணறும்
பறவையின் இறுதி மூச்சு
பேரிரைச்சலுடன் அறுத்தெறிகிறது
என் நீள்துயிலின் மெல்லிய இழையை
உயிர் நீங்கிய உடலை
கைகளில் ஏந்துகையில்
சிவக்கத் துவங்குகிறது
பறவையின் அலகு
வெளுத்துக் கனிகின்றன
கோவைக் காய்கள்
No comments:
Post a Comment