முள்வேலிகளே கதவுகளாகக் கொண்ட
உன் வீட்டிலிருந்து நீங்கி வரும்
நீண்ட இச்சாலையின் இருபுறமும்
உறைந்த உதிரத் துளிகளென
இறைந்து கிடக்கின்றன சிவந்த பூக்கள்
கரை தட்டி நிற்கும் கைவிடப்பட்ட
கப்பலொன்றின் மேல் அடர்ந்த பாசியென
இப்பயணத்துப் பிரிவின் புழுதி
அகற்ற முடியாது அப்பிக் கிடக்கிறது
முத்தத்தின் ஈரம் காய்ந்த என் உடலெங்கும்
இந்த பருவத்தில் பொய்த்த மழை
எதிர்வரும் காலத்தில் அதன் வாக்குறுதிகளை
நிறைவேற்றும் சாத்தியமறியா துயரங்களுடன்
விட்டுச் செல்கிறேன் உன் வன்புலத்தை
அனுமதி மறுக்கப்பட்ட பாதைகளின் மேல்
சிறகு விரிக்கும் வேறு நிலத்து பறவையொன்று
சேர்த்து வைத்திருக்கும் தன் கனவுகளின்
இனிமை குறித்துப் பாடத் தொடங்குகையில்
என் உடலே திரண்டெழுந்து நிற்கிறது
எனக்கெதிரான ஒரு கொடும் ஆயுதமாய்
No comments:
Post a Comment