நீ சொன்னது போலவே
இடைவெளிகள் தேவையானவை
இடைவெளிகள் இனிமையானவை!
இடைவெளி இல்லாது போகும் கணத்திற்கான
தகிப்பை இருவருக்கும் உணர்த்துபவை!
எனக்குள் உன் நிகழ்வையும்
உனக்குள் என் இருப்பையும்
நிச்சயம் செய்பவை..!
ஆம்,நீ சொன்னது போலவே..
எனினும்..
உனக்கும் எனக்கும் இடையில் - வலிய
நாம் ஏற்படுத்திக் கொண்ட இவ்வெளி
அனலில் முறியும் கருவேலங் கிளையினின்று
வழியும் பிசினென அடர்ந்து பிசுபிசுக்கும்
இருள் கவியும் - இப்புலனழி மாலையில்
வேறொன்றும் தந்துவிடவில்லை எனக்கு..!
இட்டு நிரப்ப கொஞ்சம் மௌனத்தையும்
ஒரு கவிதையையும் தவிர.
No comments:
Post a Comment