Monday, May 4, 2026

நிரம்பும் வெளி

நீ சொன்னது போலவே

இடைவெளிகள் தேவையானவை

இடைவெளிகள் இனிமையானவை!


இடைவெளி இல்லாது போகும் கணத்திற்கான

தகிப்பை இருவருக்கும் உணர்த்துபவை!


எனக்குள் உன் நிகழ்வையும்

உனக்குள் என் இருப்பையும்

நிச்சயம் செய்பவை..!

 

ஆம்,நீ சொன்னது போலவே..

 

எனினும்..

 

உனக்கும் எனக்கும் இடையில் - வலிய

நாம் ஏற்படுத்திக் கொண்ட இவ்வெளி


அனலில் முறியும் கருவேலங் கிளையினின்று

வழியும் பிசினென அடர்ந்து பிசுபிசுக்கும்

இருள் கவியும் - இப்புலனழி மாலையில்

 

வேறொன்றும் தந்துவிடவில்லை எனக்கு..!

 

இட்டு நிரப்ப கொஞ்சம் மௌனத்தையும்

ஒரு கவிதையையும் தவிர.


No comments:

Post a Comment