Monday, May 4, 2026

அனல் நதி மீன்கள்


​ஒரு கவிதையை அணுகும் போது

ஒரு காதலை அணுகும் பதட்டத்தை

எனக்கு நீயே அளிக்கிறாய்.

எரிமலைப் பிரதேசத்தில் யுகங்களாய்

சமைந்திருக்கும் – ஒரு

அனற்பாறையின் இறுக்கத்தோடு

மௌனித்து இருக்கிறேன் – இதோ

இந்தக் கார்த்திகை மாத முடிவில்

பூக்க வழியில்லாத

கண்ணுப்பீளை மலர்களை

இப்போது தேடுவதில் பயனுள்ளதா?

காலம் ஒரு பிடாரனின்

கையிலிருந்து நழுவி நழுவிச் செல்லும்

கட்டுவிரியன் பாம்பென நகர்கிறது.

எனக்குள்ளே ஓடும் நதியிலிருந்து

வெளியே துள்ளும் மீன்களை

என்னதான் செய்வது நான்?

No comments:

Post a Comment