Tuesday, May 5, 2026

நிஷாகந்தி


​பகல் – சகித்துக் கொள்ளவே முடியாத

ஒரு வெளிறிய சொப்பனம்.

தெள்ளிய நதியில் கலந்திடும்

தோல் பதனிடும் தொழிற்சாலைக் கழிவின்

வெண்மஞ்சள் நுரைகளெனப்

பாசாங்காய்ப் பரவிக் கிடக்கும்

இந்நாளின் வெளிச்சக் குப்பைகள்

அசுத்தமாக்குகின்றன – என்

சித்தத்தின் கரைகளை.

பூமிக்கடியில் ஓடும்

திசை மறுக்கும் ஆறுகளென – ரேகைகள்

விரவிக் கிடக்கும் உள்ளங்கைகளில்

மறுக்கவே முடியாத உண்மையென

நான் ஏந்திக் கொள்ள முடிவது

ஒரு நிஷாகந்தியென இதழ்கள் விரிக்கும்

இரவெனும் அந்தக் கரிய மலரை மட்டுமே.

No comments:

Post a Comment