பகல் – சகித்துக் கொள்ளவே முடியாத
ஒரு வெளிறிய சொப்பனம்.
தெள்ளிய நதியில் கலந்திடும்
தோல் பதனிடும் தொழிற்சாலைக் கழிவின்
வெண்மஞ்சள் நுரைகளெனப்
பாசாங்காய்ப் பரவிக் கிடக்கும்
இந்நாளின் வெளிச்சக் குப்பைகள்
அசுத்தமாக்குகின்றன – என்
சித்தத்தின் கரைகளை.
பூமிக்கடியில் ஓடும்
திசை மறுக்கும் ஆறுகளென – ரேகைகள்
விரவிக் கிடக்கும் உள்ளங்கைகளில்
மறுக்கவே முடியாத உண்மையென
நான் ஏந்திக் கொள்ள முடிவது
ஒரு நிஷாகந்தியென இதழ்கள் விரிக்கும்
இரவெனும் அந்தக் கரிய மலரை மட்டுமே.
No comments:
Post a Comment