அங்கீகாரமில்லாப் பிரிவின்
தொலைதூரப் பயணத்தினூடே
திரும்ப அழைக்கிறாய் என்னை
பாலையின் சுடு மணல் வெளியின்
உதடு வெடித்த யாத்ரீகனாய்
நிற்கிறேன்
கற்றாழை முட்கள் கனத்திருக்கும்
உன் கூடாரத்தின் முன்னே
பிரிவின் வாதைகளையும்
பிரிவின் காரணங்களையும்
வரிசைப் படுத்தி அடுக்காதே
தயவு செய்து
நீ உணவு பரிமாறியிருக்கும்
மேஜையின் நடுவே சப்பணமிட்டிருக்கும்
கிளைகள் பரப்பிய மௌனம்
அவற்றைத் தின்று தீர்க்கட்டும்
பனி உறைந்திருக்கும்
உன் இதழ்களால்
காய்ந்த என் நிலங்களை
ஈரமாக்கு
களைப்புற்றிருக்கிறேன் நான்
No comments:
Post a Comment