இன்று அதிகாலையிலிருந்து தூறும்
நான் யாசிக்காத இம்மழை
நேற்றிரவு மறுக்கப்பட்ட
பாடலொன்றுக்குப் பதிலியா..?
அதற்குப் பதிலாக இதையும்
ஒன்றுக்குப் பதிலாக மற்றொன்றையும்
இங்கிதமற்று தரப்போகும் இந்நாளை
இரு காதுகள் பற்றி
புட்டம் தாங்கி
ஒரு முயல்குட்டியைப் போல் தூக்கி
சின்ன பெட்டிக்குள்
அடைத்து விட விரும்புகிறேன்
ஆ.. .மனமுருகி கேட்டவுடன் அருளப்படும்
ஒரு வரம்
அல்லது ஒரு பாடல்
எத்துணை இனிது !
No comments:
Post a Comment