முற்றிலும் காலி செய்து
புறக்கணிக்கப்பட்ட ஒரு சிற்றூரின்
புறத்தே ஓடும்
செம்பழுப்பு நதி போல
வெளியேறிக் கொண்டிருக்கிறது
என் உடலில் இருந்து
ஒரு முதிராத கனவின் முடிவு.
குளியலறை எங்கும்
இரும்பின் வாசம் – வியாபித்து
இருப்பதாய்ச் சொல்கிறாய்.
அடர்ந்த இருளின் கதகதப்பில்
கண்கள் மூடி உறங்கிப் போகலாம்
ஓர் ஆக்டோபஸாய் மாறிப்
பிறவாத என் குழந்தைகளை
பிறந்தும் உடனிலாத என் சிசுக்களை
எட்டு கரங்கள் நீட்டி
விரித்து வளைத்து அணைத்தபடி.
நேற்று – விடிந்து விட்டது
என்று எழுப்பியது போல்
நாளையும் செய்து விடாதே.
இப்போதெலாம் முடிவின்றித் தொடர்ந்தபடி
இருக்கும் கனவுகளில் எல்லாம்
கரையில் துள்ளும் குஞ்சு மீன்களைக்
கடலில் சேர்த்தபடி இருக்கிறேன்.
No comments:
Post a Comment