Monday, May 4, 2026

ஆழ்

 

​முற்றிலும் காலி செய்து

புறக்கணிக்கப்பட்ட ஒரு சிற்றூரின்

புறத்தே ஓடும்

செம்பழுப்பு நதி போல

வெளியேறிக் கொண்டிருக்கிறது

என் உடலில் இருந்து

ஒரு முதிராத கனவின் முடிவு.

குளியலறை எங்கும்

இரும்பின் வாசம் – வியாபித்து

இருப்பதாய்ச் சொல்கிறாய்.

அடர்ந்த இருளின் கதகதப்பில்

கண்கள் மூடி உறங்கிப் போகலாம்

ஓர் ஆக்டோபஸாய் மாறிப்

பிறவாத என் குழந்தைகளை

பிறந்தும் உடனிலாத என் சிசுக்களை

எட்டு கரங்கள் நீட்டி

விரித்து வளைத்து அணைத்தபடி.

நேற்று – விடிந்து விட்டது

என்று எழுப்பியது போல்

நாளையும் செய்து விடாதே.

இப்போதெலாம் முடிவின்றித் தொடர்ந்தபடி

இருக்கும் கனவுகளில் எல்லாம்

கரையில் துள்ளும் குஞ்சு மீன்களைக்

கடலில் சேர்த்தபடி இருக்கிறேன்.

No comments:

Post a Comment