Monday, May 4, 2026

நழுவும் பிடி


​எப்போதும் போல் – வெகுநேரம்

காத்திருக்க நேர்ந்து விட்டது இன்றும்.

பிடிமானமற்ற பாலத்தின் மேல் நின்று

மங்கிக் கொண்டிருக்கும் மாலை ஒளியில்

இருபுறமும் குமுறியபடி புரண்டோடும்

நீரின் பிரவாகத்தைப் பார்த்தபடி இருக்கிறேன்.

வறுத்த கடலையும் இஞ்சித் தேநீரும்

விற்பவர்கள் – வெற்றுப் பார்வையுடன்

கடந்து செல்கிறார்கள்.

வந்து நாழியாயிற்றா என்கிறாய்.

அரைமனது ஆலிங்கனங்களில்

அர்த்தமென எதுவும் இல்லை.

உடனே அங்கிருந்து அகன்றிடும்

எண்ணம் வலுப்பெறத் துவங்குகிறது.

வெண்நுரை பொங்கப் பாய்ந்து செல்லும்

அடையாற்றின் வேகத்தில்

எந்தக் கவலையுமற்று நகர்கிறது

கறுப்பு அன்னங்களின் ஊர்வலமொன்று.

No comments:

Post a Comment