படுக்கையறையில் அமர்ந்தபடி
நம்ப முடியாது திகைக்கிறாள்
நீரின்றி வதங்கும்
பலகணியின் தொட்டிச் செடி மீது
தனக்கு இப்போதும் இரக்கம் பெருகுவதை.
வெயிலிலேயே காய்ந்து கிடந்தாலும்
ஈரம் உறிஞ்சாத கருங்கல் தளமென
இன்னும் மாறாதிருக்கும்
பூம்பஞ்சென மீள்கின்ற நுண்மனதை
புரியாது உற்று நோக்குகிறாள்.
கண்ணாடிக் குடுவையினுள் போட்டு
குலுக்கப்பட்ட கூழாங்கற்கள்
விரிசல்கள் ஏற்படுத்தவே இல்லையாவென
வியப்புடன் சோதிக்கிறாள் திரும்பத் திரும்ப.
திரவமாக வழிந்து ஓடுவதைத் தடுக்க
குளிரூட்டி கெட்டிப்படுத்துதல்
அதிக உஷ்ணமேற்றி ஆவியாக்குதல்
என்று இரு வழிகள் தானே…
இரவும் பகலும் தன்னை விடாது நோகடிக்கும்
தாளமுடியாத அந்த வலியை மறுக்க
தன் பற்களைத் தட்டி உதிர்த்து
மணிக்கட்டிலிருந்து உருவிய நரம்பில்
வரிசையாகக் கோர்க்கிறாள்.
குளியலறையில் யாரோ சாவதானமாக
நகம் வெட்டும் ஒலி கேட்கிறது.
No comments:
Post a Comment