Monday, May 4, 2026

முதிர்


​நீருக்கடியில் அமிழ்ந்தபடி நீந்தி

மீன்களை அலகில் கவ்விக் கொண்டு

குளத்தின் மேற்பரப்பிற்கு வந்து

சிறகுலர்த்தியபடி உண்ணும்

கரிய நீர்க்கோழி

பச்சை படித்துறையில் – பொரி மேயும்

சிறிய மீன்குஞ்சுகளை – அவை

நல்ல திரட்சியாகும் உரிய பருவம் வரை

விட்டு வைப்பதைப் போல்

மனதைக் குத்தியபடி இருக்கும்

சிறிய முட்கள் – பழுத்து

விஷமேறி கூராகும்

பனிக்காலத்திற்கென விட்டுச் செல்கிறது

கிளைகள் தோறும்

மலர்களைக் கொய்தபடி நடக்கும்

இம்மாரிக் காலத்தின் கருத்த இரவு.

No comments:

Post a Comment