பார்த்தீனிய செடிகளின் மேல் பலனின்றி
வெயிலடிக்கும் மதியப் பொழுதுகள் மட்டும்
சிரமமானவை அல்ல கடந்து போவதற்கு
வெறுமையான பகலையும் தனியான இரவையும்
ஒவ்வொரு மணித்துளியாக தாண்டி செல்பவர்
கடிகாரங்களற்ற உலகை கற்பனை செய்கிறார்
வராத அழைப்புகளுக்காக சதா அலைபேசி பற்றுபவர்
காய்ந்த உடைகளை மடிப்பதில் பெருங்கவனம் செலுத்துகிறார்
தனித்து நிற்கும் வேப்ப மரத்துப் பூக்களின் வாசம்
சாலையில் சரசரத்து அலையும் பாலித்தீன் பைகளில்
நிறைந்திருக்குமா என யோசித்து திகைக்கிறார்
சாய்வுநாற்காலியில் அமர்ந்து தினசரிகளின்
துணையோடு கொண்டு வர முயல்கிறார் - தன்
வீட்டிற்கு வெளிஉலகையும் அந்தியையும்
எப்போதாவது தாகம் தணிக்க நுழையும் - தற்போது
வழக்கொழிந்த வழிப்போக்கர்களையும் வரவேற்க
எதிர்நோக்கி மிக தயாராகவே இருக்கிறது
அவ்வப்போது வெட்டுக்கிளிகள் மட்டும்
துள்ளித் திரியும் அவர் வீட்டின் முற்றம்
No comments:
Post a Comment