சில்வண்டுகளின் அழைப்புகளை மொழிபெயர்ப்பதாய்
துவங்குவாய் ஒரு கள்ளமில்லா பேச்சை
வெயிலின் வாசம் இன்னும் மீதமிருக்கிற
இளவேனில் கால இரவுகள் அவ்வளவு
எளிதில் நம்மைக் கைவிட்டு விடுவதில்லை
மெதுவாய் மல்லிகை மொக்குகள் விரியும் நுட்பத்தை
ஆராயத் தொடங்குவோம் வெகு இயல்பாக
தேய்ந்து மெலிந்த திரியும் பிறையை வளர்த்தெடுப்போம்
தொடரும் இரவுகளில் நம் உரையாடல்களினூடே
பாலில் ஊறிய பருத்த முழு நிலவென
விரிந்த வானிற்காக ஏங்கும் பறவைக்குஞ்சு
குருதி பாய்ந்து உப்பிய சிறகுகளோடு முயற்சிக்கும்
முதல் பறத்தலுக்கு முந்தைய நொடிபோல்
பின்தொடர்ந்து ஒரு மௌனம் நீள்கையில்
நம்மோடு ஒரு கங்கென கனலத் துவங்கும்
மென்காற்றென காமம் விசிறப்படும் இவ்விரவு
பொறுத்திருக்கலாம்
கனன்று கொண்டிருக்கையில் சாம்பல் இல்லை
No comments:
Post a Comment