நம் அந்தியின் அறையில்
ஒரு மெழுகுவர்த்தியை ஏற்றுகிறாய்.
சிறிய தழல் இக்கடிய குளிரை
விரட்டும் யத்தனத்தில்
தோல்வியை ஏற்க மறுக்கும்
தேசத்தின் கொடியென – காற்றில்
படபடப்புடன் அசைகிறது.
சிதறும் மஞ்சள் வெளிச்சத்தில்
உன் முகம் துளியும்
விசனமற்று இருக்கிறது
என் தவிப்பைப் பற்றிய
எந்த உணர்தலுமின்றி.
கடல்நாய்கள் நீந்தும்
பனிக்கடலின் பாறையென
நான் அவ்வளவு சில்லிட்டிருக்கிறேன்.
நீ கொண்டு வந்திருக்கும்
இந்தச் சின்னஞ்சிறிய நெருப்பு
எனக்குக் கொஞ்சம் கூட போதவில்லை.
அறை வாசலிலேயே நீ நிற்பது
வெளி செல்வதற்கா
மீண்டும் உள் நுழைவதற்கா என
எவ்வளவு நேரம் உற்று நோக்குவது?!
கரைந்து கொண்டே இருந்தாலும்
உனதிந்த தேன் மெழுகு
எனக்காக உருகுவது இல்லை.
No comments:
Post a Comment