✤ புதிதென முகிழ்க்கும் காதலின்
சுவையென்ன அம்பா.. ?
➢ வெற்றிலைச் சாற்றில்
பனங்கள் தோய்த்து
அதிமதுரம் தடவிய நாவில்
ஒரு மிடறு கொள்ள
மெல்லென ஊறும் இரசமது.
✤ தீராப் பெருங்காமத்தின்
வாசமென்ன அம்பா.. ?
➢ கொப்பணிந்த காதுமடலின் பின்புறம்
நேற்றிரவு அவள் சூடியிராத
செங்கமல வாசம்
(அ)
➢ கட்டுக்கடங்காமல் பாய்ச்சலிடும்
குதிரையின் உடல் மணமும்
உயர் புல்வெளி சிதையும்
பச்சை வாசமும்
கலந்த ஓர் அடர் நெடி.
✤ மறுதலிக்கப்பட்ட அன்பின்
ஒலியென்ன அம்பா.. ?
➢ தேன் நிறை கூட்டின்
வழி மறந்த
மனம்பிறழ் வண்டின்
வலிமிகு ரீங்காரம்.
✤ புறக்கணிக்கப்பட்ட நேசத்தின்
வடிவமென்ன அம்பா.. ?
➢ திருகி எறிந்த
மூன்றாம் முலை
பாதி தேய்ந்த கோளென - வானில்
வலம் வரும் கோலம்.
✤ மனமுடைந்து இறந்த உயிரை
உணர்வதெப்படி அம்பா.. ?
➢ வெஞ்சினம் தீர்க்கும் நாளெண்ணி
கருவுக்குள் சுழலும் சிசுவின் அசைவை
நிறைசூல் வயிற்றில் தொட்டுப் பார்.
No comments:
Post a Comment