இப்பூங்காவின்
எல்லா பச்சைகளுக்கும் நடுவிலும்
காதலர்கள் – கண்கள் பார்த்தபடி
விரல்கள் கோர்த்தபடி
தோள்கள் உரசியபடி.
நான் – என்
மிகப் பழமையான காதல் ஒன்றை
திரும்பிப் பார்க்கிறேன்.
நிறுத்தத்திலிருந்து புறப்பட்டு
வெகு தொலைவு சென்று விட்ட
இரயிலின் பின் பக்க விளக்கின்
சிவப்பு ஒளியை – அது
தொடுவானத்திலிருந்து மறையும் வரை
பார்த்துக் கொண்டே நிற்பது போல்.
எவ்வளவு நிச்சலமான தருணம்…!
ஆனால் பாருங்கள்..
நெடிதுயர்ந்த மரத்தின் உச்சியிலிருந்து
உதிரும் இலையைத்
தன் இணையென நம்பி
அதன் கூடவே
மெல்லப் பறந்து தரையிறங்கும்
அந்தச் சுயம் மறந்த பட்டாம்பூச்சி
என்னைச் சற்று தொந்தரவு செய்கிறது.
No comments:
Post a Comment