அவள் திக்குத் தெரியாத காட்டில்
இப்போதெல்லாம் திகைத்து நிற்பதில்லை..
தன் கைப்பையில் ஒளித்திருக்கும்
பாதைகளில் ஒன்றை எடுத்து
வெளியே நழுவ விடுகிறாள்
அது ஒரு மாயக் கம்பளமென
மிதந்து சென்று – அவள்
காலடியில் படுத்துக் கொள்கிறது.
துர்சொப்பனங்களில் துரத்தும்
கொடும் விலங்குகளை விரட்ட
உள்ளங்கைகளை உரசுகையில் தெறிக்கும்
நெருப்புப் பொறிகள் கொண்டு
ஒரு சுளுந்தீயைக் கொளுத்தி ஏந்துகிறாள்.
இச்சைகளின் பொன்வண்டுகள்
மினுமினுப்பான அழைப்போடு
அவளைச் சுற்றி வருகையில்
தன் கூந்தலில் ஆபரணங்களாக்கி
பின் வசதியாக மறந்து போகிறாள்.
சிறு குளத்தில் எளிதாய் அகப்படும்
அயிரை மீனாய் ஜீவித்ததிலிருந்து
ஆழ்கடலின் இருளிலும் ஒளிரும்
ஒரு விஷம் கக்கும் ஜெல்லிமீனாய்
அவள் தன்னை மாற்றிக் கொண்டது
இதற்குச் சற்று முன்பு தான்.
No comments:
Post a Comment