பாதரசம் உருகி வழிவது போல
முழு நிலவின் பனிமலைச் சிகரங்கள்
மின்னி ஒளிர்கின்றன
இப்பயண வழியெங்கும்.
மலைப் பாதையினோரத்துக் குகையில்
கனத்த உரோமத்துடன்
உடல் சுருட்டி – குளிர்காலம் முழுதும்
உறக்க நிலையில் செயலற்றிருக்கும்
இப்பெருத்தக் கரடியைப் போன்றதே
நமக்கிடையிலான உறவும்..
வலதுபுறம் ஆழ விரியும் பள்ளத்தாக்கில்
எந்நேரமும் உருண்டிடும் அபாயத்துடன்
நகரும் வாகனத்தின் சன்னலோரம்
அமர்ந்தபடி உணர்ந்து கொள்கிறேன்
என் மனதின் பனிக்காலம் முடியவே போவதில்லை
அந்தக் கரடியின் நீள்துயிலும் கூட.
No comments:
Post a Comment