Tuesday, May 5, 2026

அல்லது

 

​உன் விநோதமான அறிவுரைகள் யாவும்

எப்போதும் தனிமையைத் தனியாக

எதிர்கொள்ள வேண்டிய

அவசியம் குறித்ததுதான்.

நீ கற்றுத் தேர்ந்த இசைக்கருவிகளுள்

எது தன்னைத் தானே

வாசித்துக் கொள்கிறது?

என் சிகையை ஒதுக்க வரும்

உன் விரல்கள் – காற்றில் நடனமிட்டபடி

பாதியிலேயே நின்று விடுகின்றன

நமக்கிடையே உடைக்க முடியாதவை

என நீ பாவிக்கும் சுவர்கள் எல்லாம்

வெறும் காற்றால் ஆனவைதான்

இவ்வளவு அஞ்சத் தேவையில்லை நீ

என் உடல் என்பது இவ்வளவுதான்

ஆயிரம் அல்லிகள் மலர வழியற்று

வாடி நிற்குமொரு நிறை தடாகம்

அல்லது

ஓர் ஆராய்ச்சிக் கூடத்தின்

கண்ணாடி குடுவையினுள்

விகசித்து மலர்ந்திருக்கும்

ஒரு செந்நிறத் தாமரை

No comments:

Post a Comment