ஒரு நிலவு எமோஜியுடன்
நீ ‘’நல்லிரவு‘’ சொல்லி
விடைபெறுகையில் தான்
இந்த இரவு உண்மையாய்ப் பிறக்கிறது
அதன் இயல்பான அடர்த்தியோடும்
அடுக்கடுக்கான அழுத்தங்களோடும்.
திடீரென்று நான் மிகவும்
நிராதரவாய் உணர்கிறேன்.
அந்தரத்தில் நடக்கையில்
கழியைத் தவற விட்ட
கழைக்கூத்தாடியைப் போலவும்….
மற்றொரு
கொடுங்கனவின் பாதையில்
பற்றியிருந்த கையொன்று
சட்டென்று உதறிச் செல்வது போலவும்.
…………………………………………………………………
.,.,.,.,.,.,.,.,.,.,.,.,.,.,.,.,.,.,.,.,.,.,.,.,.,.,.,.,.,.,.,.,.,.,.,.,.,.,.,.,.,.,.,
கூர்மையான பற்கள் கொண்ட
பசித்த முதலையென
வாய் பிளந்திருக்கும் இவ்விரவுக்கு
என் உறக்கத்தை உருட்டி
இரையாக எறிகிறேன்.
பின் – ஆழ்மனதின் ஏக்கமொன்று
வௌவாலென அறை முழுதும்
சிறகடிப்பதைப் பார்த்தவாறிருப்பேன்
விடியல் நுழையும் வரை.
குறுஞ்செய்திகளின் டிக் மார்க்குகளுக்கு
நீல ரத்தம் பாய்ந்து – அவற்றின் கீழ்
செவ்விதயப் பழங்கள் கனியத் துவங்குகையில்
அனைத்தையும் உன்னிடம் ஒப்படைத்து
நிம்மதியாய் உறங்குவேன்.
கடலோடித் திரிந்த கப்பல்
நங்கூரத்தின் உறுதியில்
அமைதியாய் ஓய்வெடுப்பது போல.
No comments:
Post a Comment