மயக்கமான மாய அந்திகளில்
நீ நடந்து செல்லும் – ஒரு
நதிக்கரையாக இருக்க விரும்புகிறேன்.
இல்லையெனில்…
ஒரு கடற்கரையாக….
ஆற்றங்கரையாக…
தடாகக் கரையாக…
அணைக்கட்டின் கரையாக…
தளும்பித் ததும்பி
பாய்ந்தோடி
ஆர்ப்பரித்து
நுரைத்துப் பொங்கி
மௌனமான தேக்கத்திலும் கூட
வெவ்வேறு விதங்களில்
வெவ்வேறு வடிவங்களில்
கரையோரங்களின் நீர்விரிவுகள்
சொல்லிக் கொண்டே இருப்பது
தீராத என் காதலை அல்லவா…!
காற்று வீசும் திசையெலாம்
அலைகள் மீது ஆடிச் செல்லும்
ஆளற்ற வெற்றுத் தோணியைப் போல
உன் பாதைகளின் திருப்பங்களிலெல்லாம்
மேகங்களில் மிதந்து கூட வரும்
தனக்கென்றோர் அர்த்தமில்லாத
அந்த
அரை நிலா.
No comments:
Post a Comment