தனித்த ஒரு தீவில் நின்று
என் கவனத்தை வைத்திருக்கிறேன்
துடுப்புகளின் சுழற்சியில்
உண்டாகும் சிற்றலைகளின் மேல்
துள்ளும் குறு மீன்கள் மீது
நிலவொளி கொண்டு மீன் பிடிப்பவன்
மறுகரையில் வசிப்பதாக அறிவிக்கிறார்கள்
மாநதியை சிறு கலத்தில் கடப்பவர்கள்
அவனுடன் நிச்சலன மீன்கள்
கரையேகும் நாள் நோக்கி
அணையாது பாதுகாக்கிறேன்
காய்ந்த சுள்ளிகள் கொண்டு
சிறு நெருப்பு ஒன்றை
பல முழு நிலவுகளுக்கு பின்னரான
ஒரு நிலவில் - புன்னை மரங்களின்
இருள் காற்றை கிழித்துக் கொண்டு
என்னை வந்தடைந்தவன் காமத்தின்
ஒளி பெருக அணைத்த பொழுது
அவன் விழிகளிலிருந்து துள்ளி
சிதைக்குள் குதித்தன இரு வெள்ளி மீன்கள்
அவன் அண்மையின் வெப்பத்திலும்
கனலும் நெருப்பின் புகையினின்றும்
கமழ்ந்து ஆட்கொள்கின்றது என்னை
அமிழ்ந்த நீர் செடிகளின்
அடர்ந்த கவிச்சி மணம்
No comments:
Post a Comment