நான் வேண்டுவது ஒரு சொல்.
ஆழ்துளைக் கிணற்றின் அடியிலிருந்து
என்னை இரட்சித்து மீட்டெடுக்குமொரு சொல்.
வெளியேற முடியாத குழப்பங்களின்
விசைமிகு சுழல்களிலிருந்து
சட்டென்று விடுவிக்குமொரு சொல்.
அதிகாலைக் கனவுகளின்
அபாய விளிம்புகளிலிருந்தும்
யதார்த்தத்தின் மாய வலைகளிலிருந்தும்
கடைத்தேற்றும் வல்லமைமிக்க சொல்.
வாசலில் பசியோடு தரையிறங்கும்
பறவைகளுக்கு – நீ அள்ளி விசிறும்
தானியங்களின் ஒரு கைப்பிடியளவு
சொற்கள் கூட அல்ல…அல்ல…
நான் தேடி நிற்பது
ஒரே ஒரு சொல்.
சிப்பி வயிற்றின் தொடர் உறுத்தலை
மறக்கடிக்க – மென்மையாகத் திரண்டிருக்கும்
வெண்மையான நித்திலத்தைப் போல்
பிரகாசமான ஒற்றைச் சொல்.
அச்சொல்லை
ஓர் ஆலின் விதையென
என் முற்றத்தில் ஆழ ஊன்று
அது பிரமாண்டமாய் உயிர்த்தெழுந்து
தன் நூறாயிரம் விழுதுகளால்
என்னைத் துவளாது தாங்கட்டும்….
No comments:
Post a Comment