நள்ளிரவுக் காற்று
கண்ணாடிச் சன்னலின்
திரைச்சீலை விலகுகிறது.
பனிக்கடியில் ஆழ்ந்து
உறங்குகிறது பெரும் மலை.
கருக்கலில் காகங்கள்
கரைகின்றன – இடைவிடாது.
கோவில் வாயிலில்
கனத்த மணியின் நாவு அமைகிறது
சிறிதும் அசைவின்றி.
வட்டமாக வானுயர்ந்து
இராட்சத மரங்கள் மூடி நிற்குமொரு வன நிலம்.
வேர்முடிச்சுகளின் தனிமையில் தியானிக்கிறது
நகர் புகுந்து விட்ட ஆதி குடியின்
கல் தெய்வம்.
மா எரியின் நீல நீர்ப் பரப்பில்
சப்தமின்றிப் பெய்கிறது பருவ மழை
ஓட்டின் பச்சை தெரிந்து மறைய
அமிழ்ந்து மிதந்து நீந்துகிறது
சின்னஞ்சிறு ஆமை.
குவளைத் தேநீர் மீது பறக்கும்
நீராவி – காற்றில் வரையும்
அரூப ஓவியத்தைப்
பார்வை விலக்காது நோக்கியவாறு
சமைந்திருக்கிறார் முதிய புத்த பிட்சு.
எரிந்து அணைந்து கொண்டிருக்கும்
சுடலைச் சாம்பல் பொடி பறக்க
வந்து விழுகிறது ஒரு மழைத் துளி
அதன் பின்
மற்றுமொரு துளி.
கனவில் சந்தித்தவனிடம் ஐயத்துடன்
இது கனவில்லையே என்கிறாள்.
இல்லை என மெலிதாகத் தலையசைத்துச்
சிகைக் கோதி – கண்கள் மூடி
உறங்கச் செய்கிறான் அவளை.
No comments:
Post a Comment