நீ அங்கே வந்து விட்டாயா?
உறுதி செய்யப்படாத ஒரு வரவை எதிர்பார்க்கிறாயா?
ஓர் அதிசயம் இந்நாளில் நிகழும் என நம்புகிறாயா?
உன் கையிலிருக்கும் மலர் முடிவற்று வாடுவதை துக்கித்திருக்கிறாயா?
நேற்றிரவின் போதையை மீட்டெடுக்கப் போராடி
மெல்ல கண்களை மூடிக் கொள்கிறாயா?
சிகை கலைக்கும் காற்று உனது பிரியத்துக்குரிய ஒரு கரம்
என்று மானசீகமாக கற்பிதம் செய்கிறாய்?
உன்னைக் கடந்து செல்லும் விலங்கின் கண்களில்
காதல் மிளிர்வதை சகிக்க முடியாமல் திரும்புகிறாயா?
அன்பிற்குரிய நண்பனே. .!
நம் கேளிக்கை விடுதியின் படிக்கட்டுகள் ஒன்றில்
உருண்டு கிடக்கும் கண்ணாடி மதுக்கோப்பையின் விளிம்பில்
தொக்கி நிற்கும் அபூர்வமான ஆயுள் கொண்ட
காலத்தின் துளியை உனக்குப் பரிசளிக்க விரும்புகிறேன்
உன் அர்த்தமற்ற காத்திருப்புகள் அத்தனையையும்
முடித்துக் கொண்டு வருகிறாயா?
No comments:
Post a Comment