காட்டின் ஒற்றையடிப் பாதையில்
வாகனமொன்றின் ஒளி வெள்ளத்தில்
செய்வதறியாது மருண்டு நிற்கும்
கள்ளமற்ற மானைப் போல
உன் விழிகளின் இயல்பான வெளிச்சத்தில்
ஸ்தம்பித்து நிற்கிறேன்.
உண்மையில் எதிரே இருக்கையில் கூட
உன் கண்கள் என்னைச்
சந்திப்பதே இல்லை.
நீ என்னிடம் பேசும் சொற்கள்
வேறு எவரையோ நோக்கியபடிதான்
சொல்லப்படுகின்றன.
காற்றின் திசை மாறும் வேகத்தில்
சிதறி விழும் ஒரு துளி மழைக்காக
வாய் விரிக்கும் சாதகப் பட்சியென
மிகுந்த பொறுமையுடன் காத்திருக்கிறேன்
நீ கவனமின்றித் தவற விடும்
சிறு பார்வைக்காக.
எனினும் அந்த மாயக்கணம்
தொடக்கூடிய தூரத்தில் முடிவின்றி
நகர்ந்தபடி இருக்கிறது.
மீன்களற்ற நதியின் மடியில்
சிறு தீண்டல் வேண்டி
நெடுங்காலமாய்ப்
பசும்பாசி அடர்ந்திருக்கும் கூழாங்கல் நான்.
No comments:
Post a Comment