Tuesday, May 5, 2026

மறுதலிப்பு


​காட்டின் ஒற்றையடிப் பாதையில்

வாகனமொன்றின் ஒளி வெள்ளத்தில்

செய்வதறியாது மருண்டு நிற்கும்

கள்ளமற்ற மானைப் போல

உன் விழிகளின் இயல்பான வெளிச்சத்தில்

ஸ்தம்பித்து நிற்கிறேன்.

​உண்மையில் எதிரே இருக்கையில் கூட

உன் கண்கள் என்னைச்

சந்திப்பதே இல்லை.

நீ என்னிடம் பேசும் சொற்கள்

வேறு எவரையோ நோக்கியபடிதான்

சொல்லப்படுகின்றன.

​காற்றின் திசை மாறும் வேகத்தில்

சிதறி விழும் ஒரு துளி மழைக்காக

வாய் விரிக்கும் சாதகப் பட்சியென

மிகுந்த பொறுமையுடன் காத்திருக்கிறேன்

நீ கவனமின்றித் தவற விடும்

சிறு பார்வைக்காக.

​எனினும் அந்த மாயக்கணம்

தொடக்கூடிய தூரத்தில் முடிவின்றி

நகர்ந்தபடி இருக்கிறது.

மீன்களற்ற நதியின் மடியில்

சிறு தீண்டல் வேண்டி

நெடுங்காலமாய்ப்

பசும்பாசி அடர்ந்திருக்கும் கூழாங்கல் நான்.

No comments:

Post a Comment