நல்ல வெயில் காலம் இல்லையா அது?
ஆலப்புழையின் காயலில்
ஒரு பொரித்த கரிமீனிற்காக நாம் சுற்றித் திரிந்த போது…
முச்சந்திகள் நாற்கரச் சாலைகள் என
நீரின் பாதைகளை அவ்வளவு
எளிதில் வரையறுக்க முடிவதில்லை.
நாமிருவர் பயணித்த படகில்
நான் மட்டும் துடுப்புகளிட்டு
வெகு நேரம் புலனழிந்து சுழன்றது
ஒரு துரோகத்தின் நீர்ச்சுழியில் தானே!
காயல் நீரின் மேலே தெரிகிறது என்பதற்காகக்
கானல் நீரில் ஈரம் இருக்கிறதா என்ன?!
அதற்கப்புறம் எத்தனை
வெயில் காலங்களைக் கடந்தாயிற்று!
குரல்வளையில் சிக்கிய
அந்தக் கரிமீனின் சிறிய முட்களை
இன்னும் அகற்ற முடியவே இல்லை.
No comments:
Post a Comment