சிறு மழை மேகமொன்று
என் வீட்டில் இடம் கேட்கிறது
பின்னொரு அந்தியில்
என் எல்லா சன்னல்களிலும்
வானவிற்கள் தோன்ற வைக்கும்
இரகசிய உறுதியளிப்போடு
வில்லின் வளைவில் கூடுகட்டும்
பறவையொன்றைத் திசைகள் கடந்து
அனுப்புவேன் ஒரு நாள்
என் குரல் நுழைய முடியாத
உன் படுக்கையறைக்கு - கலையாத
உன் உறக்கத்தின் மீது தன்
மெல்லிய இறகொன்றை உதிர்க்க
அன்று விழிக்கையில் நீ நுகரலாம்
உன் அறையெங்கும் பெருகியிருக்கும்
என் தனிமையின் வாசத்தை
No comments:
Post a Comment