Monday, May 4, 2026

அமைதி


குளக்கரைப் படியில்

பார்த்தபடி அமர்ந்திருக்கிறேன்

தட்டான்கள் தண்ணீர் பரப்பில் உண்டாக்கும்

மெல்லிய நீர்வட்டங்களை.

சாய்ந்த மரக்கிளையிலிருந்து உதிரும்

பழுத்த பழுப்பு இலை

மெதுவாக நகர்கிறது

கரை விளிம்பு நோக்கி.

ஒரு மஞ்சள் பூ – தான்

ஒரு மஞ்சள் பூவென அறியாது

மெல்ல அசைகிறது.

பாறையிடுக்கில் மாலை வெயில்

மேல் பட அசைவின்றி நிற்கிறது

நீண்ட வால் கொண்ட அரணை.

மீன் ஒன்று மேலெழும்பி

உள்புகும் ஓர் அரைவட்டச் நொடியில்

காற்று நின்று போகிறது.

படியில் பூத்திருக்கும் பாசி

கால் விரலை பச்சையாக்கிக்

கொண்டிருக்கிறது நிதானமாக.

நிறைய பேசுவது குறித்து

மிகுந்த மனக்களைப்பு

உண்டாகிறது எனக்கு.

No comments:

Post a Comment