பாலத்தின் மீது விரையும்
இரயிலின் சன்னலின் வழி
கீழே மயங்கும் மாலை ஒளியில்
அகன்று ஓடும் ஆற்றைப் பார்க்கிறாள்
முன் பின் பரிச்சயமில்லாத
பக்கத்து இருக்கைக்காரனிடம் திரும்பி
இந்த ஆற்றை முதன்முதலாக
இப்போது தான்
இப்படிப் பார்க்கிறேன் என்கிறாள்
சிறிது திடுக்கிட்டு – பின் உற்சாகத்துடன்
அவன்
ஆறுகளைப் பார்த்த
கதைகளைச் சொல்லத் தொடங்குகிறான்
இளம்பிறை ஒளியின் இரசவாதத்தில்
அவள் பிடித்திருக்கும் துருவேறிய
இரும்புச் சன்னல் கம்பிகள்
பொன்னிறத்தில் மினுங்கத் துவங்குகின்றன
மொத்தப் பயணிகளின் மனத்திரையில்
அவரவர் நீராடிய நதிகளின்
சித்திரங்கள் தோன்றி மறைகின்றன
இரயில் நின்று எல்லோரும்
இறங்கிச் சென்ற பின்னும்
அந்தக் கோச் பெட்டியில்
நீரின் சலசலப்பு
அடங்காமல் கேட்டுக் கொண்டிருக்கிறது.
No comments:
Post a Comment