எருக்கம் மொட்டுக்கள் மீது
இதழ் பதிக்கிறது வெயில்
பூ வெடிக்கிறது அவன் இடும்
முத்தத்தின் சத்தத்தோடு
*
கிளைகளுக்கிடையில் மறைந்திருக்கும்
சிறு பறவையென உன் காதல்
சடாரெனப் பறக்கையில் உதிரும்
ஒற்றைச் சிறகுக்காய் என் காத்திருப்பு
*
நம் கண்களின் உரையாடல்
சதா ஓர் அகழ்வாராய்ச்சி குறித்து
காமத்தின் கள் ஊறுகிறது
புராதன கலயத்தில்
*
அடைந்திட முடியாத காதலை
ஒரு வசீகர மலரெனச் சூடிக்கொள்கிறேன்
அது காய்கிறதுமில்லை உதிர்கிறதுமில்லை
*
மூங்கில் அசைவின் காற்றில் அதிரும்
ஒரு சிதாரின் நரம்பு என் தேகம்
உன் புல்லாங்குழல்கள் ஏன் மௌனம்?
*
மலையுச்சி இலந்தை மரத்தினூடே
நுழைந்து செல்லும் மென்காற்று உன் ஸ்பரிசம்
கிளிக்கூட்டம் அமரும் நாணல் புல்லெனத்
தள்ளாடத் துவங்கும் என் மனது
*
தேவாலயத்தில் மண்டியிட்டு
இறைஞ்சுகிறாள் காதலுக்காக
மெழுகுவர்த்திகளும் ஒற்றை வயலினும்
மெல்லக் கசிகின்றன
No comments:
Post a Comment