திருவிழா இரவொன்றில்
வானில் நிகழ்ந்து மறையும்
வண்ணமயமான வாணவேடிக்கையென
சம்பவித்து முடிந்து விடுகிறது
உன் வருகையும் பிரிவும்
வெகு தூரம் அனுப்பி விட்டிருக்கும்
வளர்ப்புப் புறாவொன்றின் திரும்புதலுக்காக
உள்ளங்கையில் அது பொதிந்திருந்த
கதகதப்புடன் காத்திருப்பதைப் போல
எதிர்நோக்கி இருக்கிறேன்
நீ மீண்டு வருவதை.
நீ விட்டுச் சென்றிருக்கும் வெறுமை
ஒரு திடப்பொருளென உருக்கொள்கிறது
உண்மையில்
நீ நீங்கிச் சென்ற பின்னரே
தொடங்குகிறது
உன்னைத் தீண்டுதல்.
No comments:
Post a Comment