இது கார்காலமா..?
கொடும் பனிக்காலமா..?
அந்தரத்தில் மயங்கிச் சுழல்கிறது
என் கடிகாரம்
கால இயந்திரத்தின் கண்ணியிலிருந்து
தெறித்து விடுபட்ட
ஓர் உலோகத் துண்டமென .
உன் நினைவுகளைக்
கிளர்ந்தெழச் செய்கிறது
மழையின் பொழுதுகள்
அடிமனது ஏக்கங்களை
அடர்ந்து உறைய வைக்கிறது
பனியின் நாட்கள்
ஒரு மகரந்தத் துகளின்
எடையைக் கூடத் தாங்கவியலாது
துவளும் சிறு தும்பியின்
கண்ணாடிச் சிறகு நான்
இரக்கமில்லாத இரு வெவ்வேறு
பருவங்களின் எடையை
எப்படித் தாங்குவது?
குழப்பமான காலத்தின் இரவுகளில்
கண்களில் நீர் வழியக்
கடல் ஆழத்தில் சயனித்திருக்கிறது
கற்சிற்பமொன்று.
No comments:
Post a Comment