Tuesday, May 5, 2026

தரவு


​திமிறும் வெண்புரவிகளின் பிடரிமயிரென

நுரைக்கும் அலைகள் உயரே எழும்

கரைகளெங்கும் ஈரமான பாறைகள்

ஒன்றில் நீ

மற்றொன்றில் நான்

நீ குனிந்து – என்னை

முத்தமிடும் பாவனையுடன் நோக்குகிறாய்

சற்றே கலவரமடைந்து நான்

சுற்றியிருக்கும் கூட்டத்தைப் பார்

இதோ இப்பருவ கால இரவுகளில்

கடலுக்குள்ளிருந்து வெளியே உலாவ வரும்

சிறு நண்டுகளின் பெருங்கூட்டம் போல்

ஊருக்குள் பரவி விடும் – இரகசியமாய்

ஒளித்திருக்கும் உறவின் தரவுகள் என்கிறேன்

நீ பதிலேதும் பேசாமல்

ஊசிக்கண்ணில் நூலை நுழைக்கும்

பார்வையின் கூர்மையுடன்

என் கண்களை ஊடுருவி

உள் நோக்குகிறாய்

நமக்கிடையே இருக்கும் வெளி

தாங்க முடியாததாகித் தகிக்கிறது

நான் எதிர்பாரா கணத்தில்

சட்டென்று

என் இதழ்களுக்குள் அமிழ்ந்து

ஆழமாய் இடப்படுகிறது

ஒரு நீண்ட முத்தம்

பாண்டிச்சேரியின் நண்டுகள்

கடலில் இருந்தால் என்ன

கரைக்கு வந்தால் தான் என்ன..?!

No comments:

Post a Comment