Monday, May 4, 2026

அலர் எழுப்பா கற்கள்

ஏதோவொரு நீர்நிலையின் தீரத்திலேயே

நிகழ்கின்றது ஒவ்வொரு முறையும்

நிச்சயிக்கப்படாத நம் சந்திப்புகள்

ஐந்திணை நெறிகளையும் புறக்கணித்து

உருவாகி உருளத் தொடங்குகிறது 

நம் கால்களின் கீழே 

உனக்கும் எனக்குமான ஒரு புது நிலம்

கூழாங்கற்களும் அது சார்ந்த இடங்களுமெனெ

ஆற்றின் மேற்பரப்பைக் கிழித்தபடி

பறந்து செல்லும் மீன்கொத்தியின் அலகென

என் மீது ஆழம் பதிந்து உழுகின்றன

கட்டவிழ்த்து விடப்பட்ட உன் பார்வைகள்

பகலெங்கும் வெயிலை விழுங்கிய

நம் நிலத்தின் கற்கள் 

ஒளியை உமிழத் துவங்குகின்றன

நிலவெழும் இந்த முன் நிசியில்

குறுகி மேலும் குறுகி

இடைவெளி இல்லாமல் போகும்

நம் நிழல்கள் நடுங்கத் துவங்குகின்றன

நீர்வெளியில் காற்று சுழித்திடும் அலைகள் மீது 

இரகசிய ஆலிங்கனங்களின் வெம்மை

கிளர்ச்சியூட்டும் நதியெனப் பெருகும்

இரவின் கரையோரம்

முத்தங்களும் மூங்கில்களும்

அடர்ந்து கிளைக்கும்


No comments:

Post a Comment