*பாறைகளில் அமர்ந்து தலைசீவும்
கடற்கன்னிகள் அறிவதில்லை
அலைகள் புரளும் கருங்கடல்
யட்சியின் கூந்தல் தான் என
*யட்சி இருள் கானகம் நடுவே
கண்கள் கிறங்கி காற்றை முத்தமிடுகிறாள்
வனத்தின் மொட்டுகளில் நிரம்பித் ததும்புகிறது
அவள் இதழ்களின் தேன்
*யட்சி காமத்தின் மலர்க்கணைகள் ஏந்தி
உலவுகிறாள் யௌவனத்தின் சாலையெங்கும்
காண்பவருக்கு அவளே ஒரு மலர்க்கணையென
கந்தர்வன் சொல்லுகிறான்
*அனல் மூட்ட எண்ணி
சுள்ளிகளுக்கு நெருப்பிடுகிறாள் யட்சி
அவள் தேகத்தின் குளிரில்
தோற்று தோற்று அணைகிறது தீ!
*நீரை விட்டு வெளியேறுகிறாள் யட்சி
சிறகுகளின் சலசலப்பு அடங்க
வெகு நேரம் ஆகிறது
பறவைகளற்ற அத்தீவின் குளத்தில்
*யட்சி தன் காசுமாலையின் - ஒரு
பொற்காசை மேலே வீசியெறிகிறாள்
பின்னிரவு வானில் மஞ்சள் நிலவென
உருகி வழிகிறது அது
*கரமுயர்த்தி சோம்பல் முறிக்கிறாள் யட்சி
அவள் கைவிரல்களில் இறங்கி
கால் நகங்களில் கசியும் வானம்
நீலமாக்குகிறது அவள் நீந்தும் நதியை
*கடல் அலைகள் மேல்
ஊர்த்துவம் ஆடுகிறாள் யட்சி
பூமியெங்கும் பெய்கிறது
ஓர் உப்பு மழை
*மோகத்தின் விடம் தலைக்கேறி
நீலமாகிறது - யட்சியைத் தீண்டிய சர்ப்பம்
அமைதியாக உறங்குகிறாள் யட்சி
*ஞானத்தின் ஆப்பிளை சுவைக்கும் யட்சி
பரி நிர்வாணம் அடைகிறாள்
சகல ஆடைகளையும் களைந்து
*சிகை கற்றைகள் கிளைத்து விரிய
தவமிருக்கும் யட்சி விருட்சமாகிறாள்
வலசை போகும் பறவைகளுக்கு
*இன்னதென்று வயதறிய முடியா யட்சிக்கு
முளைக்கின்றன ஒவ்வொரு வருடமும்
வெண்மையான பால் பற்கள்
No comments:
Post a Comment