Monday, May 4, 2026

யட்சி

*பாறைகளில் அமர்ந்து தலைசீவும் 

கடற்கன்னிகள் அறிவதில்லை

அலைகள் புரளும் கருங்கடல்

யட்சியின் கூந்தல் தான் என


*யட்சி இருள் கானகம் நடுவே

கண்கள் கிறங்கி காற்றை முத்தமிடுகிறாள்

வனத்தின் மொட்டுகளில் நிரம்பித் ததும்புகிறது

அவள் இதழ்களின் தேன்


*யட்சி காமத்தின் மலர்க்கணைகள் ஏந்தி

உலவுகிறாள் யௌவனத்தின் சாலையெங்கும்

காண்பவருக்கு அவளே ஒரு மலர்க்கணையென

கந்தர்வன் சொல்லுகிறான்


*அனல் மூட்ட எண்ணி

சுள்ளிகளுக்கு நெருப்பிடுகிறாள் யட்சி

அவள் தேகத்தின் குளிரில்

தோற்று தோற்று அணைகிறது தீ!


*நீரை விட்டு வெளியேறுகிறாள் யட்சி

சிறகுகளின் சலசலப்பு அடங்க

வெகு நேரம் ஆகிறது 

பறவைகளற்ற அத்தீவின் குளத்தில்


*யட்சி தன் காசுமாலையின் - ஒரு

பொற்காசை மேலே வீசியெறிகிறாள்

பின்னிரவு வானில் மஞ்சள் நிலவென

உருகி வழிகிறது அது


*கரமுயர்த்தி சோம்பல் முறிக்கிறாள் யட்சி

அவள் கைவிரல்களில் இறங்கி

கால் நகங்களில் கசியும் வானம்

நீலமாக்குகிறது அவள் நீந்தும் நதியை


*கடல் அலைகள் மேல் 

ஊர்த்துவம் ஆடுகிறாள் யட்சி

பூமியெங்கும் பெய்கிறது

ஓர் உப்பு மழை


*மோகத்தின் விடம் தலைக்கேறி

நீலமாகிறது - யட்சியைத் தீண்டிய சர்ப்பம்

அமைதியாக உறங்குகிறாள் யட்சி


*ஞானத்தின் ஆப்பிளை சுவைக்கும் யட்சி

பரி நிர்வாணம் அடைகிறாள்

சகல ஆடைகளையும் களைந்து


*சிகை கற்றைகள் கிளைத்து விரிய

தவமிருக்கும் யட்சி விருட்சமாகிறாள்

வலசை போகும் பறவைகளுக்கு


*இன்னதென்று வயதறிய முடியா யட்சிக்கு

முளைக்கின்றன ஒவ்வொரு வருடமும்

வெண்மையான பால் பற்கள்


No comments:

Post a Comment