Monday, May 4, 2026

கரை ஒதுங்காமை

 ஒரு சின்ன திடுக்கிடலோடு தான்

எதிர்கொள்ள வேண்டியிருந்தது நாம்

கருநீல அலைகள் நம் காலடியில் அதை

சிறு எள்ளலுடன் கொண்டு சேர்த்த போது

கனத்த ஓட்டிற்குக் கீழ் பிதுங்கிய

உப்பு நீரில் உப்பிய உடல்

பெருகும் இருளில் வெளிறிக் கொண்டிருந்தது

இனி எத்திசைக்கும் பயனிலாத

துடுப்புக் கால்கள் துவண்டு விட்டிருந்தன

அசைவற்ற அதன் கண்களுக்காய்

ஒரு துளி கண்ணீர் திரள்கையில்

என் கரங்களை அழுத்தமாகப் பற்றிக் கொள்கிறாய்

தன்னுடன் புன்னகையுடன் புகைப்படம்

எடுத்துக் கொள்கிறவர்களை பற்றிய

எந்தப் பிரக்ஞையுமற்று முற்றிலுமாய்

மரணித்து விட்டிருக்கிறது அது

எடை கூடிய எதுவாயினும் உயிரற்றதும்

கடல் கரை ஒதுக்கி விடும் என்கிறாய்

முன்னமே சொல்லியிருக்கலாம் நீ

சற்று முன்பு தான் நம்மைப் பற்றிய

நிறைவேறாத கனவுகளை

நடுக்கடலுக்கு அனுப்பி விட்டிருந்தேன்

உன் விரல்களுக்கிடையில் என் உள்ளங்கை

வியர்க்கத் துவங்குகிறது

இந்த அப்பாவிக் கடல் ஆமை போல்

நாளை கரை ஒதுங்காதிருக்கட்டும் அவை   


No comments:

Post a Comment