Monday, May 4, 2026

பின் தொடர்ந்து

 என் உள்ளங்கையில்

பதிந்து விட்டிருக்கும் 

உன் ரேகைகள் ஓடுகின்றன

நேற்றிரவு பயணத்தில்

நாம் தவறவிட்ட பாதையின்

திடீர் திருப்பங்களோடும் 

தடுமாற்றங்களோடும்

சிறு துளிகள் மழையெனப் பொழியும்

பனிப்புகை விலகாமல் படரும்

குளிர் தேசம் உனது 

சுவையின்றி சுடுகிறது இன்று

நீயின்றி அருந்தப்படும் தேநீர்

உன் மலையூரில் - நீ

செல்லுமிடங்களில் எல்லாம்

உன்னைப் பின்தொடர்ந்து செல்கிறது

ஒற்றை மேகமாய் என் நினைவுகள்

சிறு பிள்ளை கையில் பிடித்து

மறந்து போன பட்டமென!


No comments:

Post a Comment