Tuesday, May 5, 2026

மென் புகை…உதிர் மலர்


​மலைச்சிகர உச்சியில்

உயர்ந்த மரக்கிளைகளை

ஊடுருவும் வாடைக் காற்றில்…

மென்சோகத்துடன் பூத்திருக்கும்

ஜெகரண்டா மலர்களின் தனிமை…

புகை போன்ற கால்களால்

மேகங்களுக்கிடையில் நடக்கிறது.

​கரடுமுரடான மர வேர்களில்

தும்பிக்கையை ஊன்றி…

துயர் தாங்கி ஒற்றையாய் நிற்கிறது…

காட்டுத்தீயில் களிற்றைப் பறிகொடுத்த

தேற்றுவாரற்ற பெண் யானை.

அரவமற்ற இரவில்…

கரிய முதுகின் மீது

மௌனமாய் உதிர்கின்றன

ஊதா நிற மலர்கள்.

No comments:

Post a Comment