பிறழ்வின் கோடுகளைத் தொடும்
உன் காதலின் வண்ணம்
அழுத்தமான இளஞ்சிவப்பு.
அதே நிறத்தில்
உன் வெளியெங்கும் மலர்ந்து
காற்றில் கிறுகிறுக்கின்றன
உன்மத்தத்தின் செங்குவளை மலர்கள்..
காமத்தின் கள்ள நீலம் பாய்ந்திருக்கும்
அடர்சிவப்பு அல்லிகள்..
மோகத்தின் கிளர்ச்சியேறி
மென்காற்றில் மெல்லத் துவளும்
மேக வண்ண ஆம்பல்கள்.
நீர்ப்பரப்பின் மீது இடைவெளியற்று
நிறைந்து பூத்திருக்கும்
உன் தாபத்தின் பசியக் குளத்தின் மீது
இடைவிடாது பெய்து கொண்டேயிருக்கிறது
பெருஞ்சப்தமிட்டபடி அடை மழை.
கண்ணாடிக் கூரை கொண்ட ஸ்நான அறையில்
உன் உடல் வெப்பத்தில் சூடேறி
குமிழ்கள் உடையும்
குளியல் தொட்டி நீரைக் கிழித்து
முகிழ்த்து மேலெழுகின்றன
உன் நிறைவேறாத வேட்கையின்
நீண்ட தண்டுகள் கொண்ட
கருப்பு நிறத் தாமரைகள்.
No comments:
Post a Comment