உன் காதல் – இதோ
இந்தக் கண்ணாடி சாளரத்தின் வெளி
வியாபித்திருக்கும் இருளில்
நிழலுருவாய்த் தெரியும்
அந்த மலை போன்றது என்கிறாள்
நானும் என் காதலும்
வெவ்வேறல்ல என்கிறேன்
சிக்மகளூரின் புறநகர் விடுதியில்
காதுமடல்களில் வெப்பக் காற்றை
விசிறச் செய்யும் – ஒரு
மதுப்போத்தலோடு அமர்ந்திருக்கிறோம்
உன் மீட்சிக்கான வழி தான் என்ன..?
என்கிறாள் மிக்க ஆற்றாமையுடன்
காதலில் மீட்சி என்பதே
மெல்ல அழிவது தானே...?!
நெடுங்காலமாய் நொதித்த
மதுவின் வீரியம்
என்னை உடையச் செய்கிறது.
எப்படிச் சொல்ல அவளிடம்..?
நீ
நின்று நிதானமாய்
இந்தப் பச்சை மலை மேல்
பற்றிப் படரும் நெருப்பு என...
முகடுகளெங்கும் கவிந்திருப்பது
பொசுங்கும் வாசத்தின் புகையென...
No comments:
Post a Comment