கடிவாளங்களற்ற குதிரைகள் திசைகளனைத்தும்
கட்டவிழ்ந்து பாய்ந்தோடும் பச்சைவெளிகள்
பரந்து நிறைந்தது என் எல்லைகளற்ற தேசம்
ஆநிரைகளை மேட்டு நிலங்களை நோக்கி
ஓட்டிச் செல்லுங்கள் குழலூதும் இடையர்களே
இதோ! எல்லா வரம்புகளையும் கடந்தபடி
பெருகி வருகிறது எம் ஆறுகளில் புதுவெள்ளம்
என் வானில் மிதக்கும் பறவைகளின் சங்கீதங்கள்
அவை உறங்கிய பின்னும் காற்றில் இசைக்கும்
களிவெறி கொண்டு ஆடிடும் பாணர் கூட்டம்
மீட்டிச் செல்லும் என் உற்சாகத்தின் தெருக்களை
பரவசத்தின் பதாகை பறக்கும் கோட்டை மதிலெங்கும்
அன்பின் ஈரம் துளிர்த்திருக்கும் பச்சையாய்
இன்று நான் செல்லும் வழிகளெங்கும்
திராட்சை தோட்டங்கள் - என் மதுக்கோப்பை
நுரைக்கிறது நிறைகிறது வழிகிறது !
No comments:
Post a Comment