இந்த இரவில் எனக்கு
அழுக்கான அலைகள் உறுமும்
அந்தப் பழகாத கடலைப் பற்றி மட்டுமே
எழுத முடிகிறது
கரித்துகள்களும் கழிவு எண்ணெயும் மிதக்கும்
பழைய துறைமுக நகரத்தின் கடல்
உயிர்ப்பற்ற சரக்குகள் ஏற்றும்
உடலில் துருவேறும் பழுப்பு நிற கப்பல்கள்
உறங்கிப் போகின்றன அக்கடலில்
கால்கள் நனைக்க முடியாத
அந்த கடலின் கரையில் நிற்பது போல்
அரவணைக்க முடியாத கருணையற்ற
இந்த இரவின் விளிம்பில் ஒதுங்குகிறேன்
கணினித் திரையின் மங்கிய வெளிச்சத்திற்கு
ஈர்க்கப்படும்
நிலத்தின் வெக்கை எழுப்பும் தூறல்களில்
உயிர்த்தெழும் சிறிய சாம்பல் வண்டுகள்
கரிய அலைகளுக்குள் மூழ்கத் தொடங்குகின்றன
No comments:
Post a Comment