என் இதயத்தை
எல்லோரும் பார்க்கும்படி
என் சட்டைப்பையின் மேல் தைத்திருக்கிறேன்.
மேல் வானில்
செம்மையாய்ச் சமைந்திருக்கும்
அந்திச் சூரியனைப் போல.
என்னைப் பற்றிய வாக்கியங்களை
மிகச் சுலபமாய்
பிரகடனப்படுத்துகிறேன்.
இலையுதிர் காலத்தின் சருகுகளென
அவை – சாலையோரம்
சரசரத்துத் திரியும்படி.
என்ன…
இப்போதெல்லாம் – நான் எனது
என்று பேசுவதுதான்
சற்று அசூயையாக உள்ளது.
கல்லறை நிலத்தின்
ஈர மண்ணில் காத்திருக்கும்
சின்னஞ்சிறு புழுக்களே..
உங்களுக்குப் படைக்கப்படும்
எந்த இரகசியமுமற்ற
ஓர் உடலை
எவ்வளவு ஆசையாய் உண்பீர்கள்…..!
No comments:
Post a Comment